தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, October 11, 2006

ஒரு அழகிய திகில் இரவு - தொடர்ச்சி..

ஒரு அழகிய திகில் இரவு - 1
என் கழுத்தில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்ததும், உயிர் துடிக்க ஆரம்பித்தது, உயிர் பிரியும் பயத்தில் உடல் துடிக்கத்தொடங்கியது. பலம் பெருகியது. திமிறி எழுந்தேன். 'வால்நட் கிரீக்' என்றது ஸ்பீக்கர் குரல். கனவு. நான் கண்ட அத்தனையும் கனவு. அடுத்த ஸ்டாப் என்னுடையது. சுதாரிக்க முயன்றேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. திரும்பி அருகில் பார்த்தேன். அங்கே பாதிரியார் இல்லை. திடுக்கிட்டு சன்னல் வழியே பார்த்தால், அவர் அங்கே நின்று கொண்டு எனக்கு டாடா சொல்லி கொண்டிருந்தார். ரயில் வேகமாய் ஸ்டேசன் கடந்தது. உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. ஒரே குழப்பம். ரயில் ஏறியது, பாதிரியார் அருகில் அமர்ந்தது அனைத்தும் நிஜம். பாதிரியார் என் ரத்தம் குடித்தது கனவு. கனவா? ஒருவேளை அந்த ஆவி கழுத்து வழியாக என்னுள்ளே நுழைந்து விட்டதோ? இதய துடிப்பு எகிறியது.

சந்தேகமாய் கழுத்தை தொட்டுப்பார்த்தேன். விரல்களில் பிசுபிசுப்பாய் ஒரு திரவம். படபடக்கும் இதயம். அதன் துடிப்பு நான்கு மடங்கானது. விரல்களை எடுத்து பார்த்தேன். அது ரத்தம். என் ரத்தம். வாய் வழியே இதயம் வெளியே வந்து விடும் போல இருந்தது. "ப்ளிஷண்ட் ஹில்ஸ்" என்றது ஸ்பீக்கர் குரல். அவசரமாய் எழுந்தேன். கதவு மூடும் முன் வெளியே வந்தேன். ஓடினேன். யாருக்கோ பயந்து ஓடினேன். கண்களில் கண்ணீர். என்னுள்ளே யாரோ? எப்போது வெளிவந்து என்னை என்ன செய்வானோ? என்று ஏகப்பட்ட கேள்விகள். கடவுளே ஏன் இந்த சோதனை என்று வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.

கண் விழித்த போது விடிந்திருந்தது. வாசலிலேயே படுத்திருந்திருக்கிறேன். இப்படி ஒருமுறை கூட ஆனதில்லை. நான் நானாக இல்லாத போது எப்படி தூங்கி இருந்து என்ன? வெளிச்சத்தின் காரணமாக பயம் கொஞ்சம் தெளிந்திருந்தது. குளித்து தயாராகி அலுவலகம் கிளம்பினேன். அதே ரயில், ஆனால் இப்போது ஜன நெருக்கடி. ஆவி பயம் இல்லை எனக்கு. எனக்குள்ளேயே அது இருக்கும் போது தனியாக அதற்காக எதற்கு பயம்? விரக்தியான சிரிப்பு மட்டும் எனக்குள் எழுந்தது. அலுவலகத்தில் அனைவரும் கேட்டார்கள். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று. எப்படி சொல்வது நான் மனுஷி அல்ல. பேய் புகுந்த வீடு என் உடம்பு என்று. அலுவலகத்தில் யாரிடம் பேசவும் எனக்கு பயமாகவே இருந்தது. தன்னிலை மறந்து என்னுள் இருக்கும் ஆவிக்கு இடம் குடுத்து யாரையாவது ஏதாவது செய்து விடுவேனோ என்று பயம். தனிமை தேவை பட்டது. ஒதுங்கியே இருந்தேன்.

இன்றும் நேரம் ஆகி விட்டது. அலுவலகம் விட்டு வெளியே வந்தேன். இருள். இருளை பார்த்தால் பயமாக தான் இருக்கிறது. ஆவி கொண்டவள் என்றாலும் நான் ஒரு பெண். பயம் இருக்கத்தான் செய்தது. இன்று ரயிலுக்கு என்னை போல் பலரும் காத்து கொண்டிருந்தனர். ரயில் வந்ததும் ஏறிக் கொண்டேன். கால்கள் தானாய் நடந்து காலியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தேன். கண்ணை மூடலாம் என்று நினைத்து சாய்ந்த போது, பக்கத்தில் ஒரு குரல்
"ஹலோ"
திரும்பினேன். அலற நினைத்து அடக்கி கொண்டேன். அதே பாதிரியார். இது பிரமையா இல்லை நிஜமா? யாரிடம் கேட்ப்பது என்று புரியவில்லை. அதற்குள் அதே குரல் மீண்டும்
"நேற்று மாதிரி தூங்கிவிடாதீர்கள். அப்புறம் என் பாடு திண்டாட்டம்" என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன" என்றேன்.
லேசாய் சிரித்து விட்டு தொடர்ந்தார்.
"நேற்று நீங்கள் நன்கு தூங்கிவிட்டீர்கள். நான் இறங்கும் இடம் வந்ததும் உங்களை எழுப்பினேன். ஆனால் நீங்கள் அசைந்து கொடுப்பதாய் இல்லை.. கடைசியில் என்ன செய்தேன் தெரியுமா?" என்று நிறுத்தினார். கேள்வியாய் அவரை பார்த்தேன்.
"சீட்டின் மீது ஏறி, முன் சீட்டில் தாவி இறங்கினேன்.. ஹ ஹ ஹ" என்று சிரித்தார்.
எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. ஓ அதனால் தான் நான் கண் விழித்த போது அவர் வெளியே இருந்தாரா. என் பயம் கொஞ்சம் விலகியது.. வழிசலாய் முறுவலித்தேன். அவர் தொடர்ந்தார்.
"நீங்கள் தூங்குவதாய் இருந்தால், இதோ ஜன்னல் ஓர சீட். இதில் தூங்குங்கள். வழி விடுகிறேன். இன்றும் என்னால் தாவ முடியாது" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.

எனக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. அப்படி என்றால் ரத்தம். கழுத்தை மீண்டும் தடவி பார்த்தேன். ரத்தம் வந்த இடத்தில் இடறியது. பாதிரியார் தாவியது உண்மை என்றால் இந்த ரத்தத்திற்க்கு காரணம்?. கழுத்தில் இருந்த என் தங்க செயினை தடவிப் பார்த்தேன். தமிழ் பெண்களின் ஆதர்ஷ "ஊக்கு" அங்கே இல்லை. எல்லாம் புரிந்து நான் சிரிக்க ஆரம்பித்த போது பாதிரியார் அவருடைய தாவலை நினைத்து சிரிப்பதாக நினைத்து கொண்டு அவரும் என் சிரிப்பில் பங்கு கொண்டார்.
*****

ஒரு அழகிய திகில் இரவு

ஒரு சாதாரண பெண்ணுக்கு இது தேவையா? என்று நான் என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இடம் சான் ப்ரான்ஸிஸ்கோ. இரவு காலம். நடுநிசியை தொடலாமா என்று யோசிக்கும் நேரம். தனியாய் நான் பாதாள ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஐயோ என்று அலறி கத்தினால் கூட யாருக்கும் கேட்க்காது. அவ்வளவு வெறிசோடி இருந்தது. இன்னும் 5 நிமிடம் ஆகும் ரயில் வர. என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் இருந்த MP3 ப்ளேயரில் பேட்டரி தீர்ந்து போய் இருந்தது. படிக்க ரயில் அட்டவணை மட்டும் தான் இருந்தது. ரயில் வரும் திசையை நோக்கினேன். வெறும் இருட்டு குகை தான் தெரிந்தது. இந்தப் பக்கமும் ஒரு குகை, ரயில் போகும் திசை. சே என்ன வாழ்க்கை என்று நினைக்கும் போது அமைதியாய் இருந்த அறிவிப்பு ஸ்பீக்கர், கர கர குரலில், 6 பெட்டிகள் கொண்ட பிட்ஸ்பர்க் போகும் ரயில் இன்னும் 2 நிமிடங்களில் வந்து விடும் என்று அறிவித்தது. சுற்று சுவர்களில் அந்த குரல் எதிரொலித்து. கொஞ்சம் திகில் பட பாணியில் ஒலி தேய்ந்து அந்த இருட்டு குகையில் கரைந்தது. இரு தண்டவாளத்துக்கு பக்கத்தில் இன்னும் ஒரு ஒற்றை தண்டவாளம் இருந்தது. அதற்க்கு ஒரு குடை போல ஒரு தகரம் மூடி இருந்தது. அதில் தான் மின்சாரம் வருகிறது போலும், தொட்டால் வீழ்ந்து விடுவாய் என்பது போல் ஒரு அறிவிப்பு படம் சின்னதாக இருந்தது.

லேசாய் தண்டவாளம் தட தடக்கும் சத்தம் கேட்டது. அதுவரை அமைதியாய் இருந்த என் கூந்தல் லேசாய் பட படத்தது. பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த ராட்ச மின் ரயில், இருட்டு குகையில் இருந்த காற்றை தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரித்தது. நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். புயல் போல வந்து பூ மாதிரி நின்றது. சத்தமில்லாமல் கதவு திறந்தது. உள்ளே கொஞ்சம் ஆட்கள் இருந்தார்கள். தைரியமாய் உணர்ந்தேன். கதவு என் பின்னே தானாய் மூடியது. காலியாக இருந்த இருக்கைகளின் அருகில் கறுப்பர்கள் இருந்தனர். எனக்கு அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. அதனால் அவர்களை தவிர்த்தேன். சுற்றும் முற்றும் பார்த்த போது ஒரு பாதிரியார் இருந்தார். அவருடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பாதிரியார் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்ததும் திரும்பி சினேகமாய் சிரித்தார்.

நானும் சிரித்து விட்டு, கூந்தலை பின் தள்ளிவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்தேன். ரயில் மெதுவாய் என்னை தாலாட்ட ஆரம்பித்தது. நான் இறங்க வேண்டிய இடம் வர எப்படியும் ஒரு 40 நிமிடம் ஆகும். ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று இமைகளுக்குள் இருட்டை கொண்டு வர முயற்ச்சித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போய் இருக்கும், பக்கத்தில் இருந்த பாதிரியார் ஏதோ சொல்வது போல் கேட்டது. என்ன என்று பார்த்தேன். சத்தியமாய் நான் என் கனவிலும் அப்படி ஒரு உருவத்தை பார்த்தது இல்லை, மிக கோரமாய் ரத்தம் குடிக்கும் பற்களுடன், வாயோரம் ஒழுகும் எச்சிலுடனும், கண்களில் கொலை வெறியுடன், நீளமான நகங்களுடன் அவர் என் கழுத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்து எழுந்ததால் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க நேரம் இல்லை, அந்த அருவெருப்பான கை என் வாயை மூடியது. என்ன பலம்? என்னை திமிர விடாமல் மற்றொரு கை வளைத்து பிடித்தது. வசமாய் மாட்டிக்கொண்டேன். என் கழுத்தை ஒரு பக்கமாய் சாய்த்து, அது என்னை இன்னும் நெருங்கி வந்தது. என் முனகல்கள், காதில் "ஹூ ஹூ" என்ற பாடல்களை கேட்டு கொண்டிருந்த, என் பய மரியாதைகுரிய கறுப்பர்களின்("ர்") காதில் விழவில்லை.

பரிதாபமாய் வீழ்ந்தேன். கூரான இரு பற்கள் என் கழுத்தில் மிக ஆழமாய் இறங்கியது. பூனையில் வாயில் சிக்கிய எலி முரண்டு பிடிக்காதாம். எலிக்கு தெரியும் தப்பிக்க முடியாது என்று. அதனால் எந்த பிரச்சினையும் பண்ணாமல் தன் சாவுக்கு காத்திருக்குமாம். அப்படி தான் நான் இருந்தேன். என் சாவை எதிர்பார்த்து...

தொடரும்...