தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, October 11, 2006

ஒரு அழகிய திகில் இரவு

ஒரு சாதாரண பெண்ணுக்கு இது தேவையா? என்று நான் என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இடம் சான் ப்ரான்ஸிஸ்கோ. இரவு காலம். நடுநிசியை தொடலாமா என்று யோசிக்கும் நேரம். தனியாய் நான் பாதாள ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஐயோ என்று அலறி கத்தினால் கூட யாருக்கும் கேட்க்காது. அவ்வளவு வெறிசோடி இருந்தது. இன்னும் 5 நிமிடம் ஆகும் ரயில் வர. என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் இருந்த MP3 ப்ளேயரில் பேட்டரி தீர்ந்து போய் இருந்தது. படிக்க ரயில் அட்டவணை மட்டும் தான் இருந்தது. ரயில் வரும் திசையை நோக்கினேன். வெறும் இருட்டு குகை தான் தெரிந்தது. இந்தப் பக்கமும் ஒரு குகை, ரயில் போகும் திசை. சே என்ன வாழ்க்கை என்று நினைக்கும் போது அமைதியாய் இருந்த அறிவிப்பு ஸ்பீக்கர், கர கர குரலில், 6 பெட்டிகள் கொண்ட பிட்ஸ்பர்க் போகும் ரயில் இன்னும் 2 நிமிடங்களில் வந்து விடும் என்று அறிவித்தது. சுற்று சுவர்களில் அந்த குரல் எதிரொலித்து. கொஞ்சம் திகில் பட பாணியில் ஒலி தேய்ந்து அந்த இருட்டு குகையில் கரைந்தது. இரு தண்டவாளத்துக்கு பக்கத்தில் இன்னும் ஒரு ஒற்றை தண்டவாளம் இருந்தது. அதற்க்கு ஒரு குடை போல ஒரு தகரம் மூடி இருந்தது. அதில் தான் மின்சாரம் வருகிறது போலும், தொட்டால் வீழ்ந்து விடுவாய் என்பது போல் ஒரு அறிவிப்பு படம் சின்னதாக இருந்தது.

லேசாய் தண்டவாளம் தட தடக்கும் சத்தம் கேட்டது. அதுவரை அமைதியாய் இருந்த என் கூந்தல் லேசாய் பட படத்தது. பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த ராட்ச மின் ரயில், இருட்டு குகையில் இருந்த காற்றை தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரித்தது. நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன். புயல் போல வந்து பூ மாதிரி நின்றது. சத்தமில்லாமல் கதவு திறந்தது. உள்ளே கொஞ்சம் ஆட்கள் இருந்தார்கள். தைரியமாய் உணர்ந்தேன். கதவு என் பின்னே தானாய் மூடியது. காலியாக இருந்த இருக்கைகளின் அருகில் கறுப்பர்கள் இருந்தனர். எனக்கு அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. அதனால் அவர்களை தவிர்த்தேன். சுற்றும் முற்றும் பார்த்த போது ஒரு பாதிரியார் இருந்தார். அவருடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பாதிரியார் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்ததும் திரும்பி சினேகமாய் சிரித்தார்.

நானும் சிரித்து விட்டு, கூந்தலை பின் தள்ளிவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்தேன். ரயில் மெதுவாய் என்னை தாலாட்ட ஆரம்பித்தது. நான் இறங்க வேண்டிய இடம் வர எப்படியும் ஒரு 40 நிமிடம் ஆகும். ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று இமைகளுக்குள் இருட்டை கொண்டு வர முயற்ச்சித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் போய் இருக்கும், பக்கத்தில் இருந்த பாதிரியார் ஏதோ சொல்வது போல் கேட்டது. என்ன என்று பார்த்தேன். சத்தியமாய் நான் என் கனவிலும் அப்படி ஒரு உருவத்தை பார்த்தது இல்லை, மிக கோரமாய் ரத்தம் குடிக்கும் பற்களுடன், வாயோரம் ஒழுகும் எச்சிலுடனும், கண்களில் கொலை வெறியுடன், நீளமான நகங்களுடன் அவர் என் கழுத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்து எழுந்ததால் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க நேரம் இல்லை, அந்த அருவெருப்பான கை என் வாயை மூடியது. என்ன பலம்? என்னை திமிர விடாமல் மற்றொரு கை வளைத்து பிடித்தது. வசமாய் மாட்டிக்கொண்டேன். என் கழுத்தை ஒரு பக்கமாய் சாய்த்து, அது என்னை இன்னும் நெருங்கி வந்தது. என் முனகல்கள், காதில் "ஹூ ஹூ" என்ற பாடல்களை கேட்டு கொண்டிருந்த, என் பய மரியாதைகுரிய கறுப்பர்களின்("ர்") காதில் விழவில்லை.

பரிதாபமாய் வீழ்ந்தேன். கூரான இரு பற்கள் என் கழுத்தில் மிக ஆழமாய் இறங்கியது. பூனையில் வாயில் சிக்கிய எலி முரண்டு பிடிக்காதாம். எலிக்கு தெரியும் தப்பிக்க முடியாது என்று. அதனால் எந்த பிரச்சினையும் பண்ணாமல் தன் சாவுக்கு காத்திருக்குமாம். அப்படி தான் நான் இருந்தேன். என் சாவை எதிர்பார்த்து...

தொடரும்...

2 Comments:

  • At Fri Dec 26, 05:08:00 AM EST, Blogger ரவி said…

    நல்ல நடை...சிறிய பத்திகளாக அமையுங்கள் கொஞ்சம் கேப் விட்டு எழுதுங்கள்...

    அடுத்தபாகம் ?

     
  • At Fri Dec 26, 05:08:00 AM EST, Blogger ரவி said…

    நல்ல நடை...சிறிய பத்திகளாக அமையுங்கள் கொஞ்சம் கேப் விட்டு எழுதுங்கள்...

    அடுத்தபாகம் ?

     

Post a Comment

<< Home