தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, August 03, 2004

இன்னும் சில நிமிடங்களில்.... - PART 1

கி.பி. 2025.
தமிழ் உலக தொலைகாட்சியில் செய்திகள். மேக்கப் இல்லாமலே ஒரு அழகான 3D பெண் உருவம் பேசத் தொடங்கியது

"நேயர்களுக்கு வணக்கம். இது தான் மனித இனத்தின் கடைசி நாள் என்று கூறப்படுகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் வந்துள்ள "டெர்மினேட்டர் 1" என்று அழைக்கப்படும் எரி கல்லானது இன்னும் 10 நிமிடங்களில் பூமியின் மீது மோதி, மனித இனம் வாழக்கூடிய இந்த பூமியை பல கோடி துகள்களாக சிதறடித்து, நம் அனைவரையும், முடிவற்ற பால்வெளி மண்டலத்தில் ஒன்றாய் கலக்க வைக்கப்போகிறது. எந்த விஞ்ஞானமும் இந்த அழிவில் இருந்து யாரையும் காப்பாற்ற முடியாமல் கை கட்டி நிற்கிறது. கடைசியாக செய்யப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. மக்கள் அனைவரும், தங்களின், கடைசி ஆசை, பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். கடவுளின் அருள் இருந்தால் மீண்டும் உங்கள் முன் தோன்றுவேன். வணக்கம்"
என்று சொல்லிவிட்டு அந்த பெண் மறைந்தாள்.

செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சில மாதங்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் இது. ஆனால் விஞ்ஞானம் தோற்று விடும் என்று எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு தான். எல்லாம் முடிந்து விட்டது. இதோ இன்னும் 10 நிமிடம் தான். பிறகு .... வெறும் புகை அல்லது நெருப்பு தான் இருக்கும், நான் இருக்க மாட்டேன். அப்படியே அமைதியாய் உட்கார்ந்தேன். என்ன செய்வது என்று யோசித்தேன்? என் கடைசி ஆசை என்ன என்று யோசித்தேன். ஒன்றும் தோணவில்லை.

எனக்கிருக்கும் ஒரே ஆசை என் கூட காலேஜ் படிக்கும் மீராவை கல்யாணம் செய்து கொள்வது மட்டும் தான். அதற்கும் இப்போது வழி இல்லை. நான் அவளை காதலிப்பது கூட அவளுக்கு இன்னும் தெரியாது. நல்ல நண்பனாய் நினைத்து பழகுகிறாள், காதலை சொன்னால் ஏற்பாளோ மாட்டாளோ என்று தான் மௌனம் சாதித்து வருகிறேன். இப்போது போய் சொல்லிப் பார்க்கலாமா? "ம்" என்றால் சொர்க்கத்திலாவது கல்யாணம் செய்து கொள்ளலாம்,"இல்லை" என்றால், சும்மா செத்து போய்விடலாம். முடிவு செய்து விட்டேன். மீராவை போய் பார்க்க வேண்டியது தான்.

சுறுசுறுப்பாய் எழுந்தேன், இன்னும் முழுதாய் 6 நிமிடங்கள் இருந்தது. பைக் எடுத்தால் 2 நிமிடத்தில் அவள் வீடு. 1 நிமிடம் போதும் காதலை சொல்ல.மீதி 3 நிமிடம் ரொமான்ஸ் செய்யலாம். இல்லை கடைசி பிரார்த்தனை செய்யலாம். சே இந்த வண்டி சாவி எங்கே வைத்தேன்? கட்டில்.. மேஜை.. டிவி.. டைனிங் டேபிள், சோபா.. ஐய்யோ எங்கேயும் இல்லை.. இனியும் தாமதிக்க கூடாது.. விறுவிறுவென்று வாசலுக்கு வந்தேன்.

வானம் சிவப்பாய் தெரிந்தது, பக்கத்தில் ஒரு பெரிய நெருப்பு பந்து சிறிது சிறிதாய் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போய்விடும், காரியம் தான் முக்கியம். பைக்கின் ரிமோட்கண்ட்ரோல் லாக்கின் வயர்களை பிடுங்கினேன். அபாய மணி ஒலிக்கத் துவங்கியது. அதையும் பிடுங்கி வீசிவிட்டு, காலால் உதைத்து கிளப்பினேன். எஞ்சின் உறுமிவிட்டு தூங்கியது. சனியனே, இப்போது காலை வாரி விடாதே.. தயவு செய்து கிளம்பு... மீண்டும் உதைத்தேன்.. உறுமல் பின் தூக்கம்... எனக்கு இயலாமையில் கோபம் மட்டும் தான் வந்தது.

என் காதலையும் சொல்ல விடாமல் செய்யும் கெட்ட மனம் கொண்ட என் வாகனமே எழுந்திரு... என்று திட்டிக் கொண்டே மீண்டும் உதைத்தேன்... ரோஷம் கொண்டு சீறியது அது.. வேகம் பொங்க அதை திருப்பினேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் இன்னும் 3 நிமிடம் தான் பாக்கி.....

தொடரும்...

3 Comments:

Post a Comment

<< Home