தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Friday, August 06, 2004

சின்ன வாழ்க்கை

நான் லண்டன் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, என்னுடைய நிறுவனத்திலேயே வேலை செய்யும் இன்னொரு நண்பனும் அங்கே இருந்தான். அவனை பார்த்ததும், புன்னகைத்து அவன் அருகில் சென்று அமர்ந்தேன். பேச்சின் போது இது தான் அவனுக்கு முதல் விமான அனுபவமாய் அமையப் போகிறது என்பதை தெரிந்து கொண்டேன். விமானம் கிளம்பும் போது எப்படி இருக்கும், இறங்கும் போது எப்படி இருக்கும், என்று ஆர்வமாய் கேட்டுக்கொண்டான். இருவருக்கும் வேறு வேறு இருக்கைகள் கிடைத்தும், விமான பணிப்பெண்ணிடம் சொல்லி அருகருகே அமர்ந்து கொண்டோம். விமானம் கிளம்பும் முன் அதன் பாதுகாப்பு முறைகள், அவசர கால நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு, படங்கள் அனைத்தும் முடிந்த போது, பெரிய சப்ததுடன், விண்ணை கிழித்து விடும் ஆவேசத்தில் விமானம் புறப்பட்டது. என் நண்பன், என் கையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தான். 300 மைல் வேகம் பிடித்து விசுக்கென்று மேலே ஏறிய போது, கண்ணை மூடிக்கொண்டு உடம்பை உதறினான்.

"என்ன ஆச்சுடா, வாந்தி வருதா ?" என்று கேட்டவாறு அவனுக்கு தலை பிடித்தேன். இல்லை என்பது போல் தலை ஆட்டியவன், விமானத்தின் மேல் நோக்கிய நிலையை பார்த்துவிட்டு,

"இப்படி தான் போகுமா" என்றான் பயத்துடன்.
நானும் அவனை கிண்டல் செய்யாமல்,

"இல்லைடா விமானம் பறப்பதற்க்கு குறிப்பிட்ட உயரம் வேண்டும், அதை தொடும் வரை இப்படி தான் போகும்" என்றேன்.
மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.விமானம் நேர் நிலைக்கு வந்ததும், விளக்குகள் போட்டார்கள்.

"என்னா பயம்மா இருந்திச்சா?" என்று கேட்டேன்.

"ம்ம்ம் கொஞ்சம் " என்றான்.

" முதல் தடவை தானே, இப்படி தான் இருக்கும், அடுத்த தடவையில் இருந்து ஒண்ணும் தெரியாது" என்றேன்.

"அதுக்கில்லைடா, ப்ளைட்டுங்கிறது என்னா?" என கேட்டான்.

"எனக்கு கேள்வியே புரியலே, நீயே சொல்லிடு" என்றேன்.

" சரி.. ப்ளைட்டுங்கிறது, நட்டும், பொல்ட்டும், சக்கரமும், கலர் கலர் ஒயரும் சேர்ந்த ஒரு உலோக பறவை.. சரியா" என்றான்.

" ம்ம் " ஆமோதித்தேன்.

" அப்படின்னா, வெறும் நட்டையும், பொல்ட்டையும் நம்பி, முப்பதாயிரம் அடி உயரத்துல பறந்து கிட்டு இருக்கோமே.. இது சரியா??" என்றான்.
அவன் சொல்வது புரிந்தும், புரியாமலும் போனது..

"என்னதான்டா சொல்ல வர்ற நீ" என்றேன்.

"ஒண்ணும் இல்லை, ப்ளைட்ல பாராசூட் எங்கே இருக்கும் " என்று அடுத்த கேள்வியை வீசினான்.

"அப்படி எல்லாம் இருக்குமான்னு தெரியலே" என்றேன்.

"சரி அப்படியே இருந்தாலும், இத்தனை பேஸஞ்சருக்கு எப்போ எப்படி மாட்டி விடுவாங்க"ன்னு கேட்டான்.

"தெரியலே" என்றேன் ஒரே வார்தையில்.
சில விநாடிகள் யோசித்தவன்..

"அப்போ நாம எவ்வளவு அபாயத்துல இருக்கோம்ன்னு யோசிச்சு பாரு" என்றான்.
ஒன்றும் புரியாமல் அவன் முகத்தை வினோதமாய் பார்த்தேன்.

" ஒரு போல்ட், ஒரு நட்டு, லூசா இருந்து, நடு வானத்துல கழண்டு விழுந்தா என்னடா பண்ணுவாங்க? " என்றான் சீரியஸாக.

"அடுத்த ஏர்போர்ட்டுல இறக்கி மாட்டுவாங்க " என்றேன்.

" அடுத்த ஏர்போர்ட்டு வர இப்போதைக்கு வாய்ப்பே இல்லேன்னா?"

"கடல்ல இறக்குவாங்க"

" சரியா இறங்காட்டி???"என்றான் .

எனக்கு கோபம் தான் வந்தது, இவன் நிஜமாகவே கேட்கிறானா இல்லை, வேண்டும் என்றே பயமுறுத்துகிறானா என்று தெரியாததால்.

யாராவது தேவர்கள் இவன் இப்படி எல்லாம் பேசும் போது "ததாஸ்து" சொல்லி விடுவார்களோ என்று பயம் வேறு.
அதனால் ,

"சரிடா, இது போதும், எனக்கு தூக்கம் வருது" என்று முடித்தேன்.
அவனும் விடாமல்

"கடைசியா ஒரு கேள்வி.. அப்புறம் நீ தூங்கு" என்றான்.

என்ன குண்டு போட போகிறானோ என்ற பயத்தில்

"ம்ம் கேளு " என்றேன் குருட்டு தைரியத்தில்,

"ஒரு வேளை ஏதாச்சும் நட்டு கழண்டு விழுந்து, ப்ளைட் கீழே போச்சுன்னா, அது தரை அல்லது கடல் மட்டத்தை தொட எவ்வளவு நேரம் ஆகும்" என்றான்.

இவனை அடக்க வழி தெரியவில்லை எனக்கு..

"நல்ல கேள்வி கேட்டே.. இரு கணக்கு பண்ணி சொல்கிறேன்"
என்று இரு வினாடி தாமதித்து..

"உன் வாழ்க்கையின் மிச்ச நேரம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நேரம் ஆகும். " என்றேன்.

அவன் திகிலாய் பார்த்தான்.. எனவே சமாதானப்படுத்த..

"அதுனாலே இருக்குற வாழ்க்கையை இனிமையா தூங்கி, இல்லை சாப்பிட்டு, இல்லை இந்த சின்ன TV'ல் படம் பார்த்து சந்தோசப்படு"
என்று சொல்லிவிட்டு,

"ததாஸ்து" சொல்லிடாதீங்க தேவர்களே என்று பிரார்தித்துக்கொண்டே தூங்கினேன்.

0 Comments:

Post a Comment

<< Home