தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, September 07, 2004

"அம்மா நாடு" அழைக்கிறது

மாற்றங்கள் மாற்றமுடியாதவை. குருவும், சனியும் நம்மை சுற்றி சுற்றி வரும் போது, நாம் மட்டும் சும்மா ஒரே இடத்தில் இருக்க முடியுமா என்ன?. குருவோ, இல்லை சனியோ கொஞ்சம் வேகமாக சுற்றி, அதில் என்னையும் இழுத்துக் கொண்டு விட்டது. ஆம், இங்கிலாந்து நாட்டில் இனிமையாய் பொழுதை கழித்துக் கொண்டு, தமிழை படித்துக் கொண்டு இருந்த என்னை, "போடா தொன்னை" என்று சொல்லி என் தாய் திருநாடாம், இந்தியாவுக்கு வான ஊர்தியில் அனுப்ப ஓலை வந்து விட்டது. சீக்கிரமே என்னை நாடு கடத்தப் போகிறார்கள். செய்த குற்றம் என்ன? அலுவலக நேரத்தில் வலைபூ படித்தேனாம்.. தமிழுக்கு தொண்டு செய்யும் தமிழன்னில்லாத தமிழா, நீ தமிழ் நாட்டுக்கேப் போய் தமிழ் சேவையை செய் என்று தலைவர் சொல்லி விட்டார். ஆகவே, என் ரத்தத்தின் ரத்தங்களே, உடன்பிறப்பே, என் இனிய தமிழ் மக்களே, என்று பலவாறு சொல்லிக் கொண்டு சிங்கார சென்னையாம், பூலோக சொர்க்கமாம், புண்ணிய நதி கூவம் சங்கமிக்கும் ஷேத்திரத்தில், ஒரு விடியற்காலை பொழுதில் வான ஊர்தியில் வந்து இறங்கப் போகிறேன்.

வசந்த காலம் போய் விட்டது இங்கிலாந்தில். வாடை காற்றும், வாடி உதிரும் வண்ண இலைகளையும் பிரியப் போகிறேன். வறண்டே இருக்கும், வாகனம் நிறைந்திருக்கும், ஜனங்கள் சூழ்ந்திருக்கும், தண்ணீருக்கு தவிக்கும், தலை நகர் சென்னையில், வியர்வை வழிந்தோட, மேற் சட்டை, காற் சட்டை கசங்க, தொண்டை வரள, சூரியனின் கோபப் பார்வயில் சுட்டுப் பட்டு, சுருங்கி, சுருளப் போகிறேன். பாதாளப் பள்ளங்களில் பயணப்பட்டு, படியேறி, பணிக்குச் சென்று, உடல் பாதியாகி நிற்கப் போகிறேன்.

பல தலைகளுக்கு நடுவே ஒரு சிறு தலையாகி, என் தலையே மரத்துப் போகப் போகிறது. ஊழ்வினை, செய்வினை, தன்வினை மற்றும் வினை[] மொத்தமும் என் மீது ஆட்கொள்ளப் போகிறது. இயந்திரங்களுடன் இயந்திரமாக என்னை மாற்றப் போகிறது. எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாது என்று இங்கே வந்தேனோ அதையெல்லாம் இப்போது அனுபவிக்கப் போகிறேன்.இங்கே சுற்றிலும் சொந்தமில்லா மனிதர்கள் தான் ஆனால் என் சுதந்திரம் அப்படியே இருந்தது.. இப்போது அது பறிக்கப் பட்டுவிடும். ஆட்கள் சூழ்ந்திருப்பர், நாட்கள் ஓடிவிடும், கடிகார முட்கள் வேகமாய் சுற்றி விடும். யோசித்து, யோசித்து செய்தவற்றை எல்லாம், அள்ளி தெளித்து செய்ய ஆரம்பிப்பேன்... சொந்த சுக துக்கம் எல்லாம் வந்து தாக்கும்.. வேலை பளு மிகுந்து போகும்.. நானும் ஒரு சராசரி இந்தியனாகி போகப் போகிறேன்..
"பிறர் வாழ பல செயல்கள் புரிந்து...
நரை கூடி கிழப் பருவமெய்தி.....
பின் மாயும் வேடிக்கை மனிதர் போல....."

நானும்... :-(
..
..
..

1 Comments:

  • At Tue Sep 14, 04:36:00 AM EDT, Blogger அன்பு said…

    வலைப்பூவில் நண்பர் மூர்த்தியின் பதிவைப்பார்த்து ஓடிவந்தேன். பெரும் அதிர்ச்சியடைந்தேன். உண்மையிலேயே... இது நடந்துவிட்டதா? அவ்வளவு பெரியகுற்றமா என்ன இது?

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும்,
    இனி நடப்பது நல்லதாக அமையட்டும்.

     

Post a Comment

<< Home