தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, August 25, 2004

கனவு பயம் எனக்கு - PART 1

"டாக்டர் எனக்கு ரொம்ப ரொம்ப வித்தியாசமான பிரச்சினை. சொன்னா நம்புவீங்களான்னு எனக்கு தெரியல" என்று புதிராய் ஆரம்பித்தேன்.

அவர் டிவியில் வரும் பிரபல மனோதத்துவ நிபுணர். எந்த கேள்வி யார் கேட்டாலும் உடனே தகுந்த காரணங்களுடன் விளக்கம் கொடுப்பார். இவரது புகழ் பல நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் தான் அவரை கஷ்டப்பட்டு பிடித்து சில நூறுகள் செலவு செய்து அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்.

"சொல்லுங்க. உங்க பிரச்சினை எதுவா இருந்தாலும், அதுக்கு கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும்... " என்று சொல்லி விட்டு என் முகத்தை தீர்க்கமாய் பார்த்தார்.

நான் சொல்ல ஆரம்பித்தேன்

" சமீப காலமா எனக்கு ஒரு விதமான, வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர். எப்படி சொல்றதுன்னு தெரியல... அதாவது, இரவு தூக்கத்துல, ஆழ்ந்த உறக்கத்துல எனக்கு வர்ற கனவுகள் அடுத்த சில நாட்களில் நிஜமாவே நடந்துடுது டாக்டர்... "
என்ற போது அவர் முகத்தில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது. அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தேன்.

"இப்படி தான் போன மாசம் ஒரு கனவு வந்தது . ஒரு பெண்ணுக்கு நான் முத்தம் தர்ற மாதிரி, அடுத்த நாள் பஸ்ஸுல போகும் போது ஒரு பொண்ணு பின்னாடி நின்னுட்டு இருந்தேன் டாக்டர், அவ இறங்க வேண்டிய இடம் வந்தது போல, அவ திரும்பி வாசல் பக்கம் நகரப் பார்த்தா, அப்போ டிரைவர் சடன் ப்ரேக் போட்டார், நானும் அவளும் தடுமாறி போய் ஒருத்தர் மேல இன்னொருத்தர் விழுந்து முத்தம் குடுத்துக்கிற மாதிரிஆகிடிச்சி..."
என்று நிறுத்தினேன்.

அவர் அதை ரசித்தார் போல்,

"ம்ம் இண்ட்ரஸ்டிங் ... சொல்லுங்க!" என்றார்.

"உங்களை போல தான் நானும் நினைச்சேன், இது சும்மா ஒரு விபத்து, நம்ம கனவுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லேன்னு.. அப்புறம் அன்னைக்கே அடுத்த கனவு.. நான் மழைலே சொட்ட சொட்ட நனையிற மாதிரி.. உங்களுக்கே தெரியும், சென்னையில வெயில் காலத்துல மழை எப்படி பெய்யும்ன்னு.. நான் நம்பவே இல்லே... கனவு தான் இதுன்னு... ஆனா பாருங்க டாக்டர் அடுத்த நாள் நான் வெளியே போறேன்.. சோ'ன்னு மழை.. கனவுலே பார்த்த மாதிரி அப்படியே நடந்துச்சி... இதை கூட நான் என் கனவோட தொடர்பு பண்ணிக்கலே டாக்டர்... ஆனா, அடுத்து நடந்தது தான் என்னை கொஞ்சம் பாதிச்சிடிச்சி..." என்று நிறுத்தினேன்.

இப்போது கொஞ்சம் ஆர்வம் வந்தவராய்..

"அடுத்து என்ன ஆச்சு சொல்லுங்க" என கேட்டார்.

"எனக்கு கை கால் அடிபட்டு கட்டு போட்டு, பெட் ரெஸ்ட் எடுக்குற மாதிரி ஒரு கனவு ... அது வந்ததுல இருந்து நான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன், பைக் ஓட்டாம, நடக்கும் போது ரொம்ப கவனமா, யாரும் வந்து மோதிடாம, பஸ்ஸுல போகும் போது படியிலே தொங்காம.. எல்லாம் ரொம்ப உஷாரா தான் இருந்தேன்.. ஆனா ஸ்பென்ஸர் போன போது எக்ஸ்லேட்டர்ல இறங்குறப்போ பின்னாடி இருந்த ஒருத்தன் தள்ளி விட்டதால உருண்டு விழுந்து உடம்பெல்லாம் அடி. கனவுல வந்த மாதிரி நான் கட்டு போட்டு 1 வாரம் படுத்திருந்தேன் டாக்டர்.. "
என்று சொல்லி முடித்தப் போது என் கண்ணில் லேசாய் பயம் இருந்தது.

டாக்டரும் அதை அறிந்தவர் போல.
"பயப்படாதீங்க மேல சொல்லுங்க" என்றார்.

"அதையும் நான் சாதாரணமாவே எடுத்துகிறேன்னு வச்சிகங்க டாக்டர்... ஆனா இரண்டு நாள் முன்னாடி வந்த கனவு நேத்து நடந்த போது என்னால நம்பாம இருக்க முடியல ..."

"அப்படி என்ன நடந்தது??" என்றார்.

"நேத்து PMQ236 விமானம் விபத்துல சிக்கி 60 பேர் செத்தாங்க தானே?? அதை நான் என் கனவுல பார்த்தேன் டாக்டர்..."
என்று சொல்லி முடித்த போது என் கண்கள் கலங்கி போய் இருந்தது... விசும்பிக் கொண்டே,
"அதை நான் தடுத்து இருந்திருக்கலாம் தானே?? என்னை நானே நம்பாததாலே இப்படி 60 உயிர் அநியாயமா போயிடிச்சி ... "

எனக்கு சில விநாடிகள் நேரம் குடுத்த அவர், பின்..

"கூல் டவுன், கூல் டவுன்.. இதுக்கு நீங்க பொறுப்பு ஆயிட்டதா நினைச்சி வருத்தப் படாதீங்க. உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுல நீங்க வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது மாதிரி சில பேருக்கு வர்ற கனவுகள் சில சமயங்களில் நிஜத்துலேயும் நடக்குறது சகஜம் தான். இதுக்காக நீங்க உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க. யார் நினைச்சாலும் சில விபத்துக்களை தவிர்க்க முடியாது... உங்களுக்கு சில அறிவுரைகள் சொல்றேன் கேட்டுகங்க. ஆழ்ந்த தூக்கத்துல கனவுகள் பெரும்பாலும் வராது. அப்படியே வந்தாலும், அது நீங்க முழிக்கும் போது ஞாபகத்துல இருக்காது. உங்களுக்கு வர கூடிய கனவுகளை பார்த்தால், உங்களுக்கு தூக்கம் சரியா அமையலேன்னு தோணுது. இது ரொம்ப ரொம்ப சாதாரண தீர்க்கக் கூடிய பிரச்சினை.. சில மருந்துகள் எழுதி தர்றேன்.. ஒரு வாரம் கழிச்சி வந்து பாருங்க சரி ஆகி இருக்கும். சரியா??" என்றார்.

"இல்லை டாக்டர், உங்களை இவ்வளவு அவசரமா நான் சந்திக்க வந்ததுக்கு காரணமே வேற.."

"என்ன காரணம்?? " என்றார் கேள்வியுடன்.

" நீங்க இன்னைக்கு இரவு சாக போறீங்க... " என்று உறுதியுடன் கூறினேன்.
****
கனவு தொடரும்....

0 Comments:

Post a Comment

<< Home