தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, July 21, 2004

அது ஒரு அழகிய நிலாக்காலம்

10 வருடங்களுக்கு முன்பு,  அது ஒரு ஆடி மாதம். காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நான் அப்போது திருவரங்கத்தில் இருந்தேன். ஊரிலிருந்து உறவினர்கள் எல்லாரும் வந்து இருந்தார்கள். எல்லாருக்கும் அம்மா மண்டபம் சென்று குளிக்க வேண்டும் என்று ஆசை. அங்கு தான் குளிக்க பாதுகாப்பாய் கம்பி போட்டு இருப்பார்கள். தண்ணீர் எவ்வளவு வேகமாய் வந்தாலும் சரி, அதிகபட்சம் கம்பி வரை தான் இழுத்துக்கொண்டு போகும், அதற்கப்புறம், கம்பியை பிடித்துக்கொண்டு தப்பி விடலாம்.
 
மாருதி ஆம்னி வண்டியில் 7 பேர் கிளம்பினோம். பத்தாவது நிமிடத்தின் முடிவில் நாங்கள் படித்துறையில் இருந்தோம். நான், என் நண்பர்கள் சிலரை அங்கே பார்த்தேன். அதனால் உறவினர்களை அங்கேயே விட்டு, தனியே குளிக்க சென்றேன். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், எனக்கு இடுப்பளவு மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் மனம் மாறியது, கம்பியை தாண்டி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். யாரும் அறியாமல், நீருக்குள் மூழ்கி, உடலை வளைத்து கம்பிக்கு நடுவில் புகுந்து மறுபக்கம்  வந்தோம். ஏதோ சுதந்திரமே கிடைத்து விட்ட சந்தோசம். இருந்தாலும் கம்பியை விட மனசில்லை, காரணம் எங்களில் யாருக்கும் நீச்சல் அவ்வளவாக தெரியாது.
 
கம்பியை தாண்டியதும் தான் கவனித்தேன், அங்கே இன்னும் ஆழம் குறைவாக இருக்கிறது என்று. தைரியமாக கம்பியை விட்டு நடக்க ஆரம்பித்தேன். நினைத்தது போல் அங்கே ஆழம் குறைவாகவே இருந்தது. என்னைப் பார்த்து தைரியமாய் என் நண்பர்களும் என்னை நோக்கி வர ஆரம்பித்தார்கள். நண்பன் ஒருவன் கரைக்கு போய் சோப் எடுத்துக்கொண்டு வந்தான். நான் தண்ணீர் பாயும் திசைக்கு எதிர்த்து நின்றிருந்தேன். நீரின் வேகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் காலை நன்றாக ஊன்றியிருந்தேன்.
 
எனக்கு முன்னே சோப் போட்டுக் கொண்டிருந்த நண்பன், திடீரென சோப்பை தவற விட்டான். "டேய் சோப் டா.. பிடி..டா" என்று கத்தினான். நானும் குனிந்து அதை பிடிக்க முற்பட்டேன். "கிடைக்கலே" என்று சொல்லி நிமிர்ந்தேன். ஒரு அடி பின்னே வைத்து மீண்டும் குனிந்தேன். ஏதோ வித்தியாசமாய் பட்டது, கால் புதைவதாய் ஒரு உணர்வு. எச்சரிக்கை மணி அடிக்க அடுத்த காலை எடுக்க பார்த்தேன். அதுவும் புதைந்திருந்தது. பயத்தை மனதில் ஒளித்துக்கொண்டு "டேய் கை குடுடா" என்று முன்னே இருந்தவனிடம் கேட்டேன். "சோப் கிடைச்சிடுச்சா" என்றவாறு கையை நீட்டியவன் கத்த ஆரம்பித்தான். நான் மார்பு வரை தண்ணீருக்குள் போய் இருந்தேன். சத்தம் கேட்டு எல்லாரும் உஷாரானார்கள்.
 
கை நீட்டிய நண்பனும், கம்பி நோக்கி சென்று விட்டான். கரை வரை அவர்களது கத்தல் கேட்டது போல, அங்கே ஒரே பரபரப்பு, அவ்வளவு தான் பார்த்தேன், அதற்குள் நான் முழுதும் நீருக்குள் மூழ்கி இருந்தேன். கால் இப்போது சுதந்திரமாய் இருந்தது, ஆனால், 3 ஆள் ஆழத்தில் இருந்திருப்பேன். கதை முடிந்தது என்று எனக்கு தோன்றவில்லை, தரையை தொட்டதும் உதைத்து மேலே எழும்பினேன். தண்ணீர் மட்டத்திற்கு வந்தேன், நான் குளித்துக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவு அடித்து வரப்பட்டு இருந்தேன்.
 
"அதோ அங்கே" என்று ஒரு குரல். மீண்டும் தண்ணீருக்குள் பயணம், இந்த முறை லேசாக பயம், மூச்சு திணறலாய் வேறு உணர்ந்தேன். ரொம்ப ஆழத்திற்க்கு வந்துவிட்டது போல் இருள், பலமெல்லாம் திரட்டி உடம்பை மேலே கொண்டு செல்ல முயன்றேன், மீண்டும் தரை தட்டுபட்டது, உதைத்துக் கொண்டு மேலே வந்தேன், முக்கால்வாசி நான் மேலே வந்ததும், ஒரு கால் தெரிந்தது, எம்பி அதை கெட்டியாக பிடித்தேன். காலுக்கு சொந்தகாரன் கத்த ஆரம்பித்தான்.
" ஓய் விடுடா காலை, நானும் உள்ளே போயிடுவேன்" என்று சொல்லி என்னை உதற பார்த்தான். நானா விடுவேன்?? பிடித்த பிடியாய் இறுக்கி பிடித்துக் கொண்டேன். முடிவில் என் மார்பில் ஓங்கி உதைத்தான். இந்த முறை என் பிடி தளர்ந்தது. நான் கொஞ்சம் தள்ளப்பட்டேன். என்னை உதறும் முயற்சியில் அவன் என்னை அந்த நீர் சுழியில் இருந்து  வெளியேற்றி இருந்தான். அவன் விட்ட உதையில் முற்றிலும் வெளியே வந்து இருந்தேன்.
 
 அப்போது என்னால் காலை ஊன்ற முடிந்தது, இடுப்பளவில் தண்ணீர் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு கால் குடுத்தவன், "அயோக்கிய பயலே கொல்லவா பார்குற" என்று திட்டி கொண்டே சென்றான். நீச்சல் தெரிந்த இருவர் என் பக்கத்தில் வந்து "ஒண்ணுமில்லையே தம்பி" என்று என்னை பாதுகாப்பாய் கம்பிக்கு பக்கத்தில் விட்டு சென்றனர்.

இப்போதும், நான் கம்பிக்கு இந்த பக்கம் தான் இருந்தேன், நண்பர்கள் அந்த பக்கம் பாதுகாப்பாய் நின்றிருந்தனர். உடம்பு கொஞ்சம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. "சோப் கிடைச்சதாடா" என்று ஒருவன் ஆரம்பித்தான், வந்ததே கோபம் எனக்கு, கம்பி மேல் ஏறி, அவன் மீது குதித்தேன். சிரிப்பும் கும்மாளமாய் கரைக்கு வந்தோம்.
 
உறவினர் ஒருவர் அருகில் வந்தார், "என்னடா ஆச்சு? ஏன் தண்ணிகுள்ளே விளையாடிட்டு இருந்தே இவ்வளோ நேரம்?? அங்கே ஒரு பையன் உள்ளே போய்ட்டானாம், காப்பாத்த போய் இருக்காங்க. நீ தான் உள்ளே போயிட்டேன்னு பயந்து போனேன்" என்றார்.
"ஏன் பயந்தீங்க? " என்றேன்.
அவர் என்னை பார்த்து ரொம்ப ஸீரியஸாக சொன்னார்
" மாத்து துணி எல்லாம் கார்லே இருக்கு, கார் சாவி உன் டவுசர் பையிலே இருக்கு. ஈர துணியோட பஸ்ஸுல எப்படி போறதுன்னு எனக்கு பயம் வந்துடிச்சி"
 
நான் என்னையே நினைத்து சிரித்துக்கொண்டேன். நான் தண்ணீரில் மூழ்கி தப்பித்தது இன்னும் யாருக்கும் தெரியாது என் நண்பர்களை தவிர. சொல்லி இருந்தால் தினமும் நான் காவிரியில் குளிக்க  சென்றிருக்க முடியாது :-) அது ஒரு அழகிய நிலாக்காலம்.

3 Comments:

  • At Wed Jul 21, 09:52:00 AM EDT, Blogger Boston Bala said…

    ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க. இப்பவாது நீச்சல் நன்கு தெரியுமா?

    அப்புறம் இரண்டு வேண்டுகோள்:
    1. பாப்-அப் தடுக்கும் மென்கலன் இருப்பதால், வோட்டளிக்க முடியவில்லை. ஸ்பார்க்லிட் (sparklit.com) போன்ற வேறு வோட்டளிக்கும் முறையைக் கொடுத்தால் வசதியாக இருக்கும்.

    2. Post a Comment என்னும் சுட்டியை முதல் பக்கத்திலேயே கொடுத்தால், இரண்டு க்ளிக்குகளை தவிர்ப்பேன் :)

    நல்ல பதிவுகள். நன்றி.

     
  • At Wed Jul 21, 05:22:00 PM EDT, Blogger Gyanadevan said…

    நன்றி பாலா.
    ஆனால் எனக்கு இந்த இண்டர்நெட் அறிவு கொஞ்சம் கம்மி :-)... அங்கே இங்கே மற்றவர்கள் செய்வதை பார்த்து அப்படியே காப்பி அடிக்கிறேன். நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டையும் செய்கிறேன். அடுத்த முறை உங்களுக்கு 3 கிளிக்குகள் மிச்சம் செய்கிறேன்.

     
  • At Wed Jul 21, 05:54:00 PM EDT, Blogger Gyanadevan said…

    நன்றி பாலா.
    ஆனால் எனக்கு இந்த இண்டர்நெட் அறிவு கொஞ்சம் கம்மி :-)... அங்கே இங்கே மற்றவர்கள் செய்வதை பார்த்து அப்படியே காப்பி அடிக்கிறேன். நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டையும் செய்கிறேன். அடுத்த முறை உங்களுக்கு 3 கிளிக்குகள் மிச்சம் செய்கிறேன்.

     

Post a Comment

<< Home