தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, July 12, 2004

இந்தியாவிலும்.. இங்கிலாந்திலும்...

கை கால் ஊனமுற்ற ஒருவருக்கு ஓட்டுனர் உரிமம் எடுத்து கொடுத்து ஆர்.டி.ஓ அலுவலகத்தின் முகத்திரையை கிழித்து இருக்கிறது ஜூவி. பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்துல் கலாமுக்கே அரெஸ்ட் வாரண்ட் குடுத்த நாடு இது. ஓட்டுனர் உரிமம் எடுப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை தான். இருந்தாலும், இது எவ்வளவு அபாயகரமானது. நீதிதுறை ஊழல் ஒரு தனிப்பட்ட நபரை பாதிக்கும் என்றால், இது எத்தனை மக்களின் உயிரை பாதிக்கும்??? இதை படித்ததும் நான் இந்த ஊர் ஓட்டுனர் உரிமம் வாங்க பட்ட பாடு தான் ஞாபகம் வருகிறது. 1996லேயே நான் இந்திய ஓட்டுனர் உரிமம் வாங்கி இருந்தாலும் 1 வருடத்துக்கு மேல் அதை வைத்து இங்கே ஓட்ட கூடாது. எனவே நான் ப்ரவிஷனல் உரிமத்திற்க்கு விண்ணப்பித்தேன். அதற்கு 30 பவுண்டுகள்(கிட்டதட்ட 1 பவுண்டு=80 ரூபாய் தற்போது). பிறகு எழுத்து தேர்வுக்கு 29 பவுண்டுகள் கட்டினேன். எழுத்து தேர்வு என்பது கணினியில் எழுதுவது தான், 34 கேள்விகள் இருக்கும் 30 பதில்கள் சரியாக இருந்தால் தான் தேர்ச்சி பெற முடியும். அது முடிந்ததும், "Hazard Perception" என்று ஒரு பகுதி, அதில் கேள்விகள் வித்தியாசமாக இருக்கும். கணினி திரையில் நாம் கார் ஓட்டுவது போல் காட்டப்படும், அதில் எங்கெல்லாம் அபாயம் ஏற்படும் என்று கணித்து நாம் க்ளிக் செய்ய வேண்டும். இஷ்டத்திற்க்கு க்ளிக் செய்தாலும் மார்க் கிடையாது. தாமதமாக க்ளிக் செய்தாலும் மார்க் கிடையாது. அதில் 75க்கு 50 எடுத்தால் தான் பாஸ். இப்படியாக தியரி டெஸ்ட் முடித்தேன் வெற்றிகரமாக :-)

பிறகு தியரி டெஸ்ட் சான்றிதழ் வைத்து ப்ராக்டிகல் தேர்வு நேரத்தை முன்பதிவு செய்தேன், இதற்கு 40 பவுண்டுகள் :-(. அது கிடைக்க 2 மாதம் ஆனது. தேர்வுக்கு தயார் செய்து கொள்ள அருகில் இருக்கும் பயிற்சி பள்ளியில் வாரம் ஒரு வகுப்பு எடுத்துக் கொண்டேன். நான் சொந்தமாக கார் வைத்து தினமும் ஓட்டி கொண்டிருந்தாலும், என் பயிற்சியாளர் சுட்டிகாட்டிய தவறுகளை எண்ண முடியவில்லை. அத்தனை விதிகளை, முறைகளை சொல்லி தந்தார். ஒரு வகுப்பு என்பது 1 மணி நேரம், 20 பவுண்டு கட்டணம் :-( இப்படியாக 5 வகுப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு, 6ம் வகுப்பு நேரத்தில் தேர்வுக்கு சென்றேன். 45 நிமிடம் கார் ஓட்டினேன், ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார், நான் ஓட்டும் விதத்தில் உள்ள குறைகள் ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டார். சாலையில் "யு" வளைவு எடுக்க சொன்னார், பின்புறமாக வந்து 2 கார்களுக்கு நடுவே பார்க் செய்ய சொன்னார், மிக நெரிசலான பகுதிக்கு அழைத்து சென்று என் திறமையை சோதித்தார். முடிவில் "சாரி யு ..." என்று தேர்வாளர் ஆரம்பித்தார். அவர் சாரி சொல்லும் போதே எனக்கு 40 பவுண்டு போச்சே என்று தான் நினைத்தேன் :-) என் பயிற்சியாளரிடம் சில அறிவுரைகளை சொல்லி விட்டு போனார். எனக்கு கேவலமாக இருந்தது. 12 வருடமாக கார் ஓட்டுகிறேன், 8 வருட இந்திய உரிமம் வைத்து இருக்கிறேன், அதுவும் இல்லாமல் இந்த நாட்டில் 1 வருடமாக அனைத்து பகுதிகளுக்கும் காரில் சென்று வந்துள்ளேன், ஒவ்வொரு முறையும் காரை வாடகைக்கு எடுத்தால் 1000 மைல்களுக்கு குறைவாக ஓட்டியதில்லை. அப்படி பட்ட என்னைப் பார்த்து கார் ஓட்ட தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். 1 வாரம் புலம்பிக்கொண்டே இருந்தேன் 40 பவுண்டு போச்சே போச்சே என்று :-(.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் திரும்பவும் 40 பவுண்டுகள் கட்டி அடுத்த மாதத்தில் ஒரு நாள் முன்பதிவு செய்தேன். 1 மாதம் சும்மா இருக்க முடியுமா? 60 பவுண்டுகள் கட்டி 3 வகுப்புகளுக்கு சென்றேன். தேர்வு நாளன்று அதே போல் 45 நிமிடம் வண்டி ஓட்டி காட்டி, முடிவில் பாஸ் செய்தேன். ஆக மொத்தம் ஓட்டுனர் உரிமம் வாங்க நான் படித்தது 4 புத்தகங்கள், 3 சிடி ராம்கள், 9 வகுப்புகள், கிட்டதட்ட 300 பவுண்டுகள்.

இதே தான் இங்கு இருக்கும் எல்லாருக்கும் நடக்கிறது. படிப்பு, முறையான பயிற்சி இவையெல்லாம் இல்லாவிட்டால் சத்தியமாக ஓட்டுனர் உரிமம் வாங்கவே முடியாது. 4 முயற்சிகளுக்கு பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால் இந்தியாவில்?? ஜூவியே சாட்சி..

(பி-கு) 1996 ல் நான் கார் மற்றும் பைக் ஓட்டி காட்டித் தான் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெற்றேன்.

0 Comments:

Post a Comment

<< Home