தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, June 21, 2004

அரசியல் அவியல்

அரசியல் பற்றியும் பேசலாம் என்று பார்க்கிறேன். முதலில் திமுக கூட்டணி பற்றி, வேறு வழியே இல்லாமல், இணைந்து இருக்க வேண்டிய கட்டாயக் கூட்டணி. நமக்கு 4 மாடு 1 சிங்கம் கதை தெரியும். அதே தான் இங்கு நடக்கிறது. ஜெயலலிதாவை எதிர்த்து தனிதனியாக அரசியல் செய்து அடி வாங்கியது போதும் என்று ஒன்றாக இணைந்து ஜெயித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஒற்றுமையாய் இருக்கும் வரை இவர்களுக்கு பிரச்சினை இல்லை, பிரிந்தால்....:-) சொல்ல ஒன்றும் இல்லை, பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படியே கூட்டணி பிரிகிறது என்றால் முதல் ஆள் தைலாபுர மருத்துவராக தான் இருக்கக்கூடும். கருணாநிதியும் இவரும் ஒரே மாதிரி வாரிசு அரசியல் செய்வதால், விரைவில் வில்லங்கம் வரலாம், ஏனென்றால் பங்காளிகள் ஆயிற்றே(வாரிசு அரசியலில்). வைகோ- அடிபட்ட சிங்கம்? புலி? எதுவோ ஒன்று, அடி கொஞ்சம் பலம் தான். அண்ணன் தயவு இப்பொழுது இருக்கிறது, ஆனால் நிச்சயமாய் அது நிலையானது அல்ல. இதுவும் சமயம் வந்தால் கழண்டு கொள்ளும். காங்கிரஸ்- வேறு வழியில்லாததால் திமுகவுடன் இருக்கும். அம்மா பக்கம் போக ரொம்ப பயப்படுவார்கள்.

அம்மா கூட்டணி - இதுவும் ஒரு வகையில் கட்டாயக் கூட்டணி தான் அல்லது இப்படி சொல்லலாம் "கழித்துக்கட்டப் பட்டவர்களின் கூட்டணி" என்று. வேறு வழியே இல்லாமல் பாஜகவும் அம்மாவும் இணைந்தார்கள், இணைந்திருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைத்துக் கொண்டாலும், அதே கைகளை குலுக்கியும் கொள்கிறார்கள். தைலா புரமும், புலியும், கிரக நிலை மாறும் போது, இங்கே வந்து விடுவார்கள், புதிய கோஷத்துடன். பாஜக - வேறு வழியில்லாததால் அம்மாவுடன் இருக்கும்.

சூடான சர்ச்சை: விஜயகாந்த் பக்கம் நியாயம் இருப்பதாகவே எனக்கு படுகிறது (இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு, அதான் நான் யார் பக்கம்ன்னு தெரிஞ்சி போச்சே :-(). அவர் கேட்டதிலும் அர்த்தம் இருக்கிறது. பதிலுக்கு அய்யா விட்ட அறி(வி)க்கை(அரைவேக்காட்டுக்கை) கொஞ்சமும் நாகரீகமாக இல்லை(அவரிடம் அதை எதிர்பார்க்க கூடாதோ??). தமிழ்நாட்டு அரசியல் ரொம்ப கேவலமாகி கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

சுயநலம், சந்தர்ப்பவாதம் அல்லது ஒற்றுமை என்று எப்படி பெயர் வைத்துக் கொண்டாலும் சரி சமீபத்தில் காவிரி பிரச்சினைக்காக திமுக-அதிமுக இணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியதே. அடுத்தவர் மட்டும் தனியாக பெயர் வாங்கிட கூடாது என்ற நல்லமனம்(?) இருவரையும் இணைத்தது.. இப்படியே எல்லாவற்றிலும் இருந்தால்... மன்னிக்கவும் கற்பனைக்கும் ஒரு அளவுண்டா?... மீண்டும் சந்திப்போம்

0 Comments:

Post a Comment

<< Home